About the Book
20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளை, இந்த நூல், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வாயிலாக எடுத்துரைக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள தத்துவஞானி, தன்னுடைய மாணாக்கனான அந்த இளைஞனிடம், நம்முடைய கடந்தகாலத் தளைகளிலிருந்தும், பிறர் நம்மிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு எப்படி நம்மால் நம்முடைய சொந்த வருங்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறார். இந்த விதமான சிந்தனை நமக்கு ஒரு விடுதலையுணர்வை அளிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் நாமும் நம்மீது திணிக்கின்ற வரம்பெல்லைகளை அலட்சியம் செய்வதற்கும், நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்குமான துணிச்சலை இந்நூல் நமக்கு அளிக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள கோட்பாடுகள் நடைமுறைக்கு உகந்தவையாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்கள் இந்நூலைப் படித்துப் பயனடைந்துள்ளனர்.
About the Author(s)
இச்சிரோ கிஷிமி
1956 ஆம் ஆண்டு, ஜப்பானிலுள்ள கியோட்டோ நகரில் பிறந்த இச்சிரோ கிஷிமி, இன்றும் அங்கேதான் வசித்து வருகிறார். பள்ளிக்காலத்திலிருந்தே ஒரு தத்துவவியலாளராக ஆக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். நவீன மேற்கத்தியத் தத்துவவியலில், குறிப்பாகப் பிளேட்டோவின் தத்துவத்தில் மேதைமை பெற்றிருந்த அவர், 1989 முதல் அட்லரிய உளவியலில் தீவிர ஈடுபாடு கொண்டு, அதில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர் அட்லரிய உளவியல் குறித்து எழுதி வருவதோடு, அது குறித்துச் சொற்பொழிவும் ஆற்றி வருகிறார். மேலும், அங்கீகாரம் பெற்ற உளவியல் ஆலோசகர் என்ற முறையில் அவர் மனநல மருத்துவச் சிகிச்சையகங்களில் ஆலோசனைகளை அளித்து வருகிறார். அட்லரிய உளவியலுக்கான ஜப்பானியக் கழகத்தின் ஆலோசனையாளராகவும் அவர் இயங்கி வருகிறார். அவர் அட்லரின் பல புத்தகங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
ஃபூமிடாகா கோகா
1973 இல் பிறந்த ஃபூமிடாகா கோகா, விருதுகள் பல பெற்றுள்ள ஓர் எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர். அவர் பல வணிக நூல்களையும், பிற புனைகதை அல்லாத நூல்களையும் எழுதியுள்ளார். அவர் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அட்லரிய உளவியல் அறிமுகமானது. பாரம்பரிய ஞானத்திற்கு எதிரான அக்கோட்பாடு அவர்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, கோகா, இச்சிரோவைச் சந்திப்பதற்காக எண்ணற்ற முறை கியோட்டோவிற்குச் சென்றுள்ளார். கோகா, அட்லரிய உளவியல் கோட்பாடுகள் குறித்து இச்சிரோவிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டார். தன் சந்திப்புகளின்போது, அட்லரிய உளவியல் கோட்பாடுகள் குறித்துத் தாங்கள் அலசிய விஷயங்கள் குறித்து விரிவான குறிப்புகளை எடுப்பதை அவர் ஒரு வழக்கமாக ஆக்கிக் கொண்டிருந்தார். கிரேக்கத் தத்துவ ‘உரையாடல் மாதிரி’யில் அமைந்திருந்த அந்தக் குறிப்புகள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.